அந்தியூர்: அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்., 5ல் நடைபெற உள்ளது. நேற்று மகிஷாசூரமர்தனம் எனும் எருமை கன்று பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு, நேற்று எட்டு கை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி முடிந்தவுடன், குண்டத்திற்கு அருகில் அமைத்திருத்த குழி முன், பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய எருமைக்கன்று நிறுத்தப்பட்டது. பின்னர், அம்மனிடம் வாக்கு கேட்கப்பட்டது. பூ வாக்கு உத்தரவு கிடைத்தவுடன் காலை, 11:40 மணிக்கு முகமைதாரர் எருமைக்கன்றை பலி கொடுத்தார். எருமைக்கன்று பலி கொடுக்கும் நிகழ்ச்சியை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை, 9:00 மணிக்கே கோவிலுக்கு வரத்துவங்கினர். அறநிலையத்துறை சார்பில், பக்தர்கள் நிற்பதற்கு நிழற்கூட வசதி செய்யாததால், வெயிலில் தவித்தனர். மேலும், கழிப்பிட வசதியும் செய்யாததால், அருகில் உள்ள பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்துக்கு சென்றனர். குடிநீர் வசதியும் முறையாக இல்லை. விழா சமயத்தில் கூட, பக்தர்கள் அடிப்படை வசதியின்றி தவித்தனர்.