பதிவு செய்த நாள்
24
மார்
2017
04:03
மதுரை : இஸ்கான் பொன் விழா மற்றும் ஸ்ரீராமானுஜர் (ஆயிரமாவது) சஹஸ்ராப்தி விழா ஆகிய இருபெரும் ஆன்மீக விழாக்கள், மார்ச் 26 ஞாயிறு அன்று மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறுகிறது. ராமானுஜர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டும்,”சுவாமி பிரபுபாதா, உலகளாவிய இஸ்கான் என்றழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை துவக்கி 50 ஆண்டுகள் ஆவதை கருத்தில் கருதியும் இந்த விழாவினை இஸ்கான் ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீமத் ராமானுஜர்: மனித குல வரலாற்றில் வியப்பூட்டும் தத்துவமேதை சமநோக்கு, சமுதாய நோக்கு, சமுதாயபணி, மதத்தில் மறுமலர்ச்சி செய்தவர், அனைவரையும் திருத்தி நல்வழிப்படுத்தியவர். ஸ்ரீல பிரபுபாதா: ஜாதி, மத, இன, மொழி, என எந்த வேற்றுமையும் பாராது, தனது கருணையினால் உலகம் முழுவதும் ஹரிநாமத்தை பிரச்சாரம் செய்து, மிகத் தாழ்ந்த மக்களையும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியவர். எனவே இருபெரும் ஆன்மீக ஆச்சார்யர்களின் வழித்தடங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த விழா நடைபெற உள்ளது. ஸ்ரீலபிரபுபாதாவின் நேரடி சீடர் தவத்திரு.ஜெயபதாக ஸ்வாமி அவர்களும், ஆழ்வார் திருநகரி ஜீயர் ஸ்ரீரெங்க ராமானுஜ ஜீயர் ஸ்வாமி அவர்களும் விழாவிற்கு முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் உலகளாவிய அளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இஸ்கான் பக்தர்களும், முக்கிய திவ்யஸ்தலங்களைச் சேர்ந்த ஸ்ரீராமானுஜரின் அடியார்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில், பன்னாட்டு பக்தர்களின் ஹரிநாம சங்கீர்த்தனம், ஸ்ரீராமானுஜரின் சஹஸ்ராப்தி, மற்றும் இஸ்கான் பொன்விழா உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் நோக்கம், “ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதா ஆகிய இரு பெரும் ஆன்மீக ஆச்சாரியர்கள் வழங்கிய ஆன்மீக அறிவுரைகளை மக்களுக்கு நினைவூட்டுவதும், அதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்வில் தெய்வ சிந்தனையை நிலைப்படுத்தி, கலாச்சாரமான வாழ்க்கையை வாழ வழிகாட்டுவதே” ஆகும். அனைத்து தரப்பு மக்களும் இவ்விழாவில் பங்கேற்று பயனடையும் வகையில் ஏற்பாடுகளை இஸ்கான் பக்தர்கள் குழு செய்து வருகிறது.
தொடர்புக்கு: இஸ்கான், மதுரை. - இஸ்கான், திருப்பாலை