பதிவு செய்த நாள்
25
மார்
2017
01:03
ஆற்காடு: வேப்பூர், பாலாற்றில், 600 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த, வேப்பூர் பாலாற்றில், வசிஷ்டேஸ்வரர் கோவில் அருகில், அங்குள்ள இளைஞர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சீமைக்கருவேல மரங்களை கடந்த, 12ல் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில், மூன்று நடுகற்கள் இருந்தன. இது குறித்து, வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சாருமதி கொடுத்த தகவலின்படி, ஆற்காடு தாசில்தார் பிரியா, ஆற்காடு அரசு அருங்காட்சியக காப்பாளர் ரஞ்சித் ஆகியோர் நடுகற்களை ஆய்வு செய்தனர். அவை, 600 ஆண்டுகள் பழமையானது என, தெரியவந்தது. இது குறித்து ஆற்காடு அரசு அருங்காட்சியக காப்பாளர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: வேப்பூர் பாலாற்றில், வசிஷ்டேஸ்வரர் கோவில் அருகே, கண்டுபிடிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் 600 ஆண்டுகள் பழமையானது. இந்த நடுகற்கள் நவ கண்டம் என்ற பெயர் கொண்டது. இங்கிருந்தவர்கள், தன்னை அழித்துக் கொண்டு மக்களை பாதுகாத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே, அதன் நினைவாக நடுகற்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகற்களில், பீடத்துடன், ஐந்து அடி உயரமும், கையில் கத்தி இருப்பது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பில், நடுகற்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து அரசு அருங்காட்சியக அதிகாரிகள் விரைவில் வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.