அய்யாவாடியில் அமாவாசை நிகும்பலா யாகம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2017 03:03
மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள், நிகும்பலா யாகம் நடைபெற்றன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திசையிலும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். சிறப்புவாய்ந்த இக்கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரனடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். பங்குனி மாத அமாவாசையான இன்று காலை அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார் கள் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மகாபிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குரு க்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.