தஞ்சாவூர்: பங்குனி மாத தொடக்கத்திலேயே இயற்கை தெய்வமான சூரியபகவானின் கடும் கதிர்களை சாந்தப்படுத்த வேண்டியும், உருத்ரனின்(சிவபெருமான்) மறு வடிவமாக திகழும் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 50கிலோ எடையில் விளாமிச்சைவேர் என்கிற குருவேர் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ராமநாம ஜபம், அகண்டபாராயணம், சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசத அர்ச்சனைகளும் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு ராமன்பட்டாச்சாரியார், மோகன் பட்டாச்சாரியார் பிரசாதங்களை வழங்கினர். அமாவாசை அன்று மட்டை தேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்தால் நினைத்த சுபகாரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம் என்பதால் திரளான பக்தர்கள் மட்டைதேங்காயை சிகப்பு துணியில் கட்டி ஜெயமாருதியின் திருவடியில் வைத்து பூஜை நடத்தினர்.