பதிவு செய்த நாள்
27
மார்
2017
05:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் விழாவில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி, அம்மனை தரிசித்தனர்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி உற்சவம் கடந்த 16ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில், காலை முதல் பக்தர்கள் காப்பு கட்டி, முருகன் கோயில், பட்டத்தரசியம்மன்கோயில், திருவண்ணாமலை பெருமாள் கோயில்களில் சாமி தரிசனம் செய்து, 12 மணிக்குமேல் ரதவீதிகள் சுற்றி கோயிலை வந்தடைந்தனர். சரியாக 1.30 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சகர் ஹரி சிறப்பு பூஜைகள் செய்து,அம்மன் புறப்பாடு நடந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் கொடியசைக்க, ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கத் துவங்கினர்.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள்பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் சுந்தரராஜ் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு பொதுநல அமைப்பினர் பக்தர்களுக்கு நீர்,மோர் பந்தல் அமைத்து குளிர்பானங்கள் வழங்கினர். சுமார் 10 கி.மீ சுற்றளவிலுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பூக்குழி இறங்கி அம்மனை தரிசித்தனர்.