காஞ்சி குமரக்கோட்டத்துக்கு வேறொரு தனிச்சிறப்பும் உண்டு. ஆம்! கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் இது. குமரக் கோட்டத்து முருகப்பெருமானை நாள்தோறும் பூஜை செய்து வழிபட்டவர் கச்சியப்ப சிவாச்சாரியார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், எமது வரலாற்றை அழகிய செந்தமிழில் பாடுக என ஆணையிட்டார். அத்துடன், திகட சக்கரச் செம்முகம் என்று முதல்அடியும் எடுத்துக் கொடுத்தார்.
ஆறுமுகனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய கச்சியப்பர், கந்தபுராணத்தை இயற்ற தொடங்கினார். ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் வீதம் எழுதிவந்தார் கச்சியப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அன்று எழுதிய பாடல்களை முருகனின் திருவடிகளில் வைத்துவிட்டுச் செல்வார். மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் அமைந்திருக்கும். இவ்வாறு முத்துக் குமரனின் அருளால் கந்தபுராணம் நிறைவு பெற்றது.
அரங்கேற்றத்தின்போது, கந்த புராணத்தின் முதல் வார்த்தையாக உள்ள திகட சக்கரம் என்பதில் சொற்குற்றம் இருப்பதாகக்கூறினார் புலவர் ஒருவர். மன வருத்தத்துடன் இரவு உறங்கச்சென்ற கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், புலவரின் சந்தேகத்தைத் தானே வந்து நிவர்த்தி செய்வதாகக் கச்சியப்பருக்கு வாக்களித்தார். அதன்படியே மறுநாள் புலவர் உருவில் அவைக்கு வந்து, திகட சக்கரம் என்ற வார்த்தை வீரசோழியம் என்ற நூலில் இருப்பதாகக் குறிப்பிட்டு மறைந்தார். வந்தவர் முருகப்பெருமான் என்பதை அறிந்த புலவர் பெருமக்கள் கச்சியப்பரின் முருகபக்தியை வியப்புடன் போற்றினர். இந்த அருள் நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தை இன்றைக்கும் இக்கோயிலில் தரிசிக்கலாம்.