பதிவு செய்த நாள்
29
மார்
2017
10:03
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் ருத்ராட்சம் வைத்து பூஜிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலமாகும். கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. இதில், ஏதாவது ஒரு பொருள் வைத்து, பூஜிக்கப்படுவது வழக்கம். பக்தர் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, என்ன பொருள் வைப்பது என உத்தரவிடுவார். கோவிலுக்கு செல்லும் பக்தர், பொருள் குறித்து கூறுவார். சுவாமியிடம் பூ வாக்கு கேட்டபின், உத்தரவு பெட்டியில் அந்த பொருள் வைக்கப்படும்.
இந்தப் பொருள், நடக்க இருப்பதை முன் கூட்டியே குறிப்பாக உணர்த்துவதாக அமைவது சிறப்பு. கடைசியாக, பிப்.,22 முதல் மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,சென்னையைச் சேர்ந்த, சங்கர் சுப்பிரமணியம் என்பவர் கனவில், கிடைத்த உத்தரவையடுத்து, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல், ஒரு முகம் உடைய, 108 ருத்ராட்சம், வில்வ இலை நீலநிற துணிப்பையில் வைத்து பூஜிக்கப்படுகிறது. இதுகுறித்து, கோவில் சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிவனுக்குரிய ருத்ராட்சம், வில்வ இலை வைக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சம் ஆன்மிகத்தின் அடையாளம். வரும் காலத்தில் ஆன்மிகத் தேடலில் ஏராளமானோர் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெய் சிலிர்த்தேன்: சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த, எஸ்.சங்கர் சுப்பிரமணியம் கூறியதாவது: கடந்த, 26ல் என் கனவில் முருகர் தோன்றினார். திருநீறில் வைத்து ஒருமுகம் உடைய, 108 ருத்ராட்சம், ஒரு வில்வ இலையை, என் சன்னிதியில் உள்ள பெட்டியில் வை என்று கூறினார். இதுகுறித்து சென்னை, நவாஸ்பேட்டையில் சிவன் கோவில் சிவாச்சாரியார் ஒருவரிடம் கேட்டேன். இதைக்கேட்ட அவர், இங்கு சிவன்கோவில் உழவார பணி நடக்கிறது. பழமையான ருத்ராட்ச மாலை உள்ளது என்றார். ஒரு பையில் இருந்த ருத்ராட்சமாலையை கொடுத்தார். அதில் மிகச்சரியாக, 108 ருத்ராட்சம், அதுவும் ஒருமுகம் உடையதாக இருந்தது. பக்தி பரவசத்தில் மெய் சிலிர்த்து போனேன். அதைத்தான் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க தந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.