பதிவு செய்த நாள்
30
மார்
2017
10:03
திருவாரூர்: திருவாரூரில், ஆழித் தேரோட்டத்தை, பாரம்பரிய வழக்கப்படி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூரிலுள்ள,தியாகராஜ சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க, மிக பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித் தேர். 1930, மார்ச் 2ல், ஆழித் தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே தேரோட்டம் நடந்தது; பின், பல காரணங்களால், தேரோட்டம் தடைபட்டது.
பின், 1970ல், தேரோட்டம் மீண்டும் துவங்கியது. பங்குனி உத்திர விழாவின்போது, ஆயில்ய நட்சத்திரத்தில், ஆழித் தேரோட்டம் நடத்தப்படுவது ஐதீகமாகும். ஆயில்யத்தில் ஆழித் தேர் ஓடினால் ஊரும், நாடும் செழிக்கும் என்பது நம்பிக்கை.கடந்த, 1990 - 91ம் ஆண்டுகளில், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்பின், ஆயில்யத்தில் தேர் ஓடவில்லை. இதற்கு, ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் ஓடினால், ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று திடீரென பரவிய கருத்துதான் காரணம் என, கூறப்படுகிறது. இது வதந்தியே தவிர, உண்மை இல்லை என, பக்தர்கள் கூறுகின்றனர்.நடப்பு ஆண்டிற்கான பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த 14ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இந்தாண்டு, பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரம்,வரும் ஏப்ரல், 6ல் வருகிறது.அன்றைய தினம், ஆழித் தேரோட்டம் நடத்தப்பட வேண்டும். குறைந்த இடைவெளியில் ஆயில்ய நட்சத்திரம் வருவதாலும், குறிப்பிட்ட நேரத்தில் நிதி திரட்ட முடியாததாலும், ஐதீக முறைப்படி ஆழித் தேரோட்டத்தை நடத்த முடியவில்லை என, கோவில் நிர்வாகத்தினர் சமாளிக்கின்றனர். ஆனால், மே மாதம், ஆழித் தேரோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு இருப்பதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.