பதிவு செய்த நாள்
12
ஏப்
2017
02:04
சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனிப்பெருவிழாவின் கடைசி நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக அரங்கேறியது. உற்சவர் கபாலீசுவரர் - கற்பகாம்பாள் திருமண கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சென்னை , மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவிலில் பங்குனி மாதப் பெருவிழா கொடியேற்றத்துடன், ஏப்., 2ம் தேதி துவங்கியது. விழாவின், 10ம் நாளான நேற்று, திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை, திருக்கூத்தப்பெருமான் திருக்காட்சி, ஐந்திருமேனிகள் விழா நடந்தது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன், மாதே வரை வழிபடல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, உற்சவர் கபாலீசுவர்– கற்பகாம்பாள் திருமண வைபவம் துவங்கியது. இருவரும், சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். பின், சனீஸ்வரர் சன்னிதி அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், நேற்று இரவு எழுந்தருளினர். திருமண சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின், கபாலீசுவரர், கற்பகாம்பாளை திருமணம் புரிந்து, பக்தர்களுக்கு மணக்கோலத்தில் அருள்பாலித்தார். இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையடுத்து, கயிலாய ஊர்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, கொடி இறக்கத்துடன், பங்குனி விழா நிறைவு பெற்றது. இன்று, பந்தம் பறி விழாவும், நாளை விடையாற்றி விழாவும் நடக்கிறது.