பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
11:04
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா, ஏப்.,2 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்.,11 ல் கொடியிறக்கப்பட்டது. நேற்று காலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை ஆயிர வைசிய சமூக நலச்சங்கம், ஆயிர வைசிய இளைஞர் சங்கம், மறுமலர்ச்சி பேரவை, செட்டியார் சங்கம், மதுரையார் சங்கம் என பல்வேறு அமைப்புகள் சார்பில், வைகை ஆற்றில் இருந்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷம் முழங்க பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும், இளநீர் காவடி எடுத்தும், பெரிய பஜார், பெருமாள்கோயில், ஆதிமுத்தாலம்மன் கோயில் உள்பட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். 11:00 மணிக்கு மேல் மூலவர் மற்றும் உற்சவருக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பழச்சாறு பல்லாயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் பூப்பல்லக்கில் சயன கோலத்தில் வீதி உலா வந்தார். பரமக்குடி டி.எஸ்.பி., கருப்பையா தலைமையில், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.