பதிவு செய்த நாள்
13
ஏப்
2017
01:04
மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. கடந்த 4ம் தேதி கொடி ஏற்றத்துடன், திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் 8ம் நாள் முக்கிய விழாவான பரந்தாமன், பார்வதி, குறவன் - குறத்தி வேடத்தில் நகர சோதனை, இரவு வீரபத்திரன், பூதகணங்களுடன் காளிமுறம் ஏந்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர் மற்றும் சந்தன அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. காலை பூங்கரகம் வீதியுலாவும், மாலை அம்மன் பூ அலங்காரத்தில் திருத்தேரில் வீதியுலாவும், கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து தருமராயன்பட்டினம் என்னும் ஐய்யன்பேட்டையை பாவாடைராயனுடன் அழிக்கும் காட்சி நடந்தது. மயானகொள்ளை நிகழ்ச்சியில் காய்கறி, பழங்களை வாரி இறைத்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சின்னசாமி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இன்று இரவு அம்மன் தெப்பல் உற்சவமும், வரும் 19ம் தேதி இரவு முத்துபல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது.