பதிவு செய்த நாள்
07
நவ
2011
10:11
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சமுதாயத்துக்கு இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தியது இரண்டு (ஈத்கள்) பெருநாட்கள் மட்டுமேயாகும். அவற்றுள் ஒன்று ஈகைத் திருநாள் (ஈதுல் பித்ர்), மற்றொன்று தியாகத் திருநாள் (ஈதுல்அள்ஹா) ஆகும்.
துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வசதியுடையோர் அனைவரும் தம் தியாகத்தை வெளிப்படுத்த அல்லாஹ்வுக்காக ஆடு, மாடு மற்றும் ஒட்டகத்தை அறுத்துப் பலியிடுகின்றனர். அதற்கான முறைகளை குர்-ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தெளிவாகத் தெரிந்து கொள்வோம். (நபியே!) நிச்சயமாக நாம் உமக்குக் கவ்ஸர் (எனும் நீர்த்தடாகத்தைக்) கொடுத்திருக்கிறோம். ஆகவே, உம் இறைவனைத் தொழுது, (அவனுக்காக குர்பானி) அறுத்துப் பலியிடவும் செய்வீராக! (108: 1..2) ஹஜ்ஜூ பெருநாளில் (அல்லாஹ்வுக்காக) அறுத்துப் பலியிடுவதைவிடச் சிறந்த செயலை ஒருவர் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற ரத்தம் அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றதாகும். (எனவே) அதைச் சிறந்த முறையில் அறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ)
குர்பானியின் நோக்கம் அல்லாஹ் குர்-ஆனில் கூறுகின்றான்: (பலிப்பிராணிகளாகிய) அவற்றின் இறைச்சிகளோ, அவற்றின் ரத்தங்களோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை: மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சம்தான் அவனைச் சென்றடையும். (22:37) (நபியே!) நீர் கூறுவீராக: என் தொழுகை, என் (குர்பானி) வழிபாடு, என் வாழ்வு மற்றும் என் மரணம் (ஆகிய அனைத்தும்) அனைத்துலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியவை. (06: 162)
எத்தனை ஆடுகள்?: ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பதே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இதுவே நடைமுறையில் இருந்தது என்பதை பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப் (ரளி) அவர்களிடம், நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஒருவர் தமக்கும், தம்முடைய குடும்பத்தா ருக்கும் சேர்த்து ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பார். இன்று, மக்கள் பெருமையடிப்பதற்காக, நீர் காணக்கூடிய (ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடுகளைக் குர்பானி கொடுக் கின்ற) நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித் தார்கள் என்று, அதாஉ பின் யசார் (ரளி) அறிவித்துள் ளார்கள். (நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா, முஅத்தா)
கூட்டுக் குர்பானி: கூட்டாக ஏழு பேர் சேர்ந்து, ஒவ்வொருவரும் தமது பங்குக்குரிய தொகையைப் போட்டு, ஒரு மாட்டை வாங்கிக் குர்பானி கொடுக்கலாம் என்பதற்குப் பின்வரும் நபிமொழி ஆதாரமாகும். மாட்டிலும், ஒட்டகத்திலும் எங்களுள் ஏழு பேர் சேர்ந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று ஜாபிர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்ஸிம்) நாங்கள் பயணத்தில் இருந்தோம். ஹஜ்ஜூ பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேரும், ஓர் ஒட்டகத்தில் பத்து பேரும் கூட்டாகிக் கொண்டோம் என்று இப்னுஅப்பாஸ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: திர்மிதீ, இப்னுஹிப்பான்)
சேமித்து வைக்கலாமா?: நபி (ஸல்) அவர்கள் உங்களுள் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாட்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம் என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள், "இறைத்தூதரே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா? என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், "நீங்களும் அதிலிருந்து உண்டுவிட்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில், மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன் என்று பதிலளித்தார்கள் என, சலமா பின் அக்வஹ் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ 5569)
குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை: அஷ்ஷைக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் அளித்த மார்க்கத் தீர்ப்பு: குர்பானி கொடுக்க நாடியுள்ளவர், துல்ஹஜ்ஜூப் பிறை பிறந்த நாள் அதை நிறைவேற்றும் நாள் வரைத் தம்முடைய முடி, நகம் மற்றும் உடலின் எப்பகுதியிலிருந்தும் முடியைக் களையக் கூடாது. உங்களுள் ஒருவர் குர்பானியை நிறைவேற்ற விரும்பினால், துல்ஹஜ்ஜூ மாதம் தலைப்பிறை முதல் அதை நிறைவேற்றும் வரைத் தமது முடி, நகம் மற்றும் உடலின் எப்பகுதியிலிருந்தும் எதனையும் களைவதைத் தவிர்த்துக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக உம்முசல்மா(ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம்) அறுத்துப் பலியிடும் நேரமும் நாட்களும் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத்தஷ்ரீக்கின் கடைசி (துல்ஹஜ்ஜூ மாதம் பதிமூன்றாம்) நாள் வரை குர்பானியை நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது குர்பானியாகக் கணிக்கப்பட மாட்டாது.
ஹஜ்ஜூப் பெருநாளில் தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அதில், யார் இத்தொழுகையை நிறைவேற்றிவிட்டுக் குர்பானி கொடுக்கிறாரோ, அவர், அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுத்து விட்டாரோ அவர், அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என்று கூறியதாக, பர்ரா பின் ஆஸிப் (ரலி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ) தோலை கூலியாக கொடுக்கக்கூடாது குர்பானித் தோலை ஏழைகளுக்குத் தானமாக வழங்கிவிட வேண்டும். அதைத் தானே வைத்துக் கொள்வதோ, விற்பதோ கூடாது. "நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம் ஒப்படைத்தபோது, அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும், உரித்தவர்களுக்குக் கூலியாக அதில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார்கள் என்று, அலீ (ரலி) அறிவித்துள்ளார்கள். (நூல்கள்: புகாரீமுஸ்லிம்) ஆக, வசதியுடையோர் அனைவரும் மனமுவந்து அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுத்து மறுமையில் வெற்றியடைவோமாக!
-சி.நஜீப் அஹ்மத்