திருப்புத்துார்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து தங்கக் கவசத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மருதீஸ்வரர் மண்டபத்தில் அங்குசத்தேவர், அஸ்திரத் தேவர் எழுந்தருளினர். காலை 9:30 மணிக்கு இருவரும் புறப்பட்டு, கோயில் திருக்குளக்கரையில் எழுந்தருளினர். தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியர் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஸ்ரீதர் குருக்கள் திருக்குளத்தில் அங்குச்தேவர், அஸ்திரத்தேவருக்கு தீர்த்தவாரி நடத்தினார். பரம்பரை அறங்காவலர்கள் பெரியகருப்பன், மாணிக்கவாசகன் பங்கேற்றனர். இரவில் மூலவர் சன்னதி முன் ஹேவிளம்பி ஆண்டுக்கான புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.