பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
12:04
சிக்கல்: சிக்கலில் மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் நிலத்தை குறிக்கும் எல்லைக்கல்லை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும், வரலாற்று ஆய்வாளர்கள் விரும்புகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. கோயிலுக்கு அருகே 2 கி.மீ., தொலைவில் குறிச்சிக்குளம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலத்தில் திரிசூலக் கல், சீமைக்கருவேல மரங்களாலும், புதர்செடிகளாலும் மறைந்த நிலையில் உள்ளது. மூன்று அடி மட்டுமே வெளியே தெரிகிறது. அதில் உடுக்கையுடன் கூடிய திரிசூலமும் வலது புறத்தில் சூரியனும், இடது புறத்தில் சந்திர பிறையும் செதுக்கப்பட்டுள்ளது. மேலக்கிடாரம், வரலாற்று ஆர்வலர் டி.செந்தில்குமார் கூறியதாவது: கி.பி., 1,236ல் மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் ,சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குரிய நிலத்தினை குறிக்கும் வகையில் எல்லைக்கல்லாக, திரிசூலக்கல் நடப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை தேவதானம், என அழைத்தனர் . 1905ல் பிரிட்டிஷ் அரசின் கோயில்கள் வரலாற்று ஆவண புத்தகத்தில், இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிகப்பழமையான திரிசூலக்கல்லை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.