பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
11:04
ஆர்.கே.பேட்டை:கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்த அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, துரியோதன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது. பதினெட்டாம் நாள் போர்க்கள நிகழ்வில், மூத்த மகன் துரியோதனனை இழந்ததால் ஆவேசமான காந்தாரி, அங்கு இருந்தவர்களை துடைப்பம் மற்றும் முறத்தால், அடித்து துவம்சம் செய்தார்.1,000 பக்தர்கள் விரதம்ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, 15 நாட்களாக நடந்து வருகிறது. இதில், தினசரி, மகாபாரதம் சொற்பொழிவு, தெருக்கூத்து உள்ளிட்டவை நடந்து வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று, காலை 10:00 மணிக்கு, 18ம் நாள் போர்க்களம் நிகழ்வு தெருக்கூத்து கலைஞர்களால், நடத்தப்பட்டது. இதில், பீமசேனன், துரியோதனை வீழ்த்தினான். கொல்லப்பட்ட துரியோதனன் குருதியை கூந்தலில் தடவி, தன் சபதத்தை பாஞ்சாலி நிறைவேற்றி கொண்டார்.
அதே நேரம், தன் மூத்த மகன் துரியோதனனை இழந்த சோகத்தில், அங்கே போர்க்களத்தில் கூடியிருந்தவர்களை, காந்தாரி துடைப்பம் மற்றும் முறம் கொண்டு நைய புடைத்தாள். காந்தாரியிடம் துடைப்பம், முறத்தால் அடி வாங்க, அங்கிருந்தவர்கள் முண்டியடித்து கொண்டனர். அதை தொடர்ந்து, நித்ய திருமங்சனத்திற்காக, திரவுபதியம்மன், பஞ்ச பாண்டவர், கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், குளக்கரைக்கு எழுந்தருளினர்.
தர்மர் பட்டாபிஷேகம்: மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மன் பக்தர்கள் பரிவாரத்துடன் இறங்கினார். இன்று காலை, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, நகர்வலம் வருகிறார். இன்றுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை திரவுபதியம்மன் கோவிலிலும், நேற்று, தீமிதி திருவிழா நடந்தது.