பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
12:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீராமானுஜர், 1,000மாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பெரிய தேர் சீரமைக்கப்பட்டு, புதுபொலிவுடன் விழாவிற்கு தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், பெரிய தேர் விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த ஸ்ரீராமானுஜரின், 1,000மாவது ஆண்டு விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவிலில், ஏப்.,22 முதல், மே 1 வரை நடக்கிறது. முன்னதாக, ஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்ச விழா கடந்த,12ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் ஆதிகேசவப்பெருமாள் உற்சவ விழாவின் ஏழாவது நாளும், ஸ்ரீராமானுஜரின் திருஅவதார உற்சவத்தின் ஒன்பதாவது நாளும், திருத்தேர் விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால், ஸ்ரீபெரும்புதுாரின் சாலைகள் குண்டும், குழியுமாகமாறியது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய தேர் பயன்படுத்தாமல், சிறிய தேர் மட்டுமே, விழாவின் போது பயன்படுத்தப்பட்டது. இதனால், பெரிய தேர் பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காணப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டுக்கு பெரிய தேர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து, சில மாதங்களுக்கு முன், பெரிய தேர் சீரமைக்கும் பணி துவங்கியது. இதில், தேரின் சக்கரங்கள், சிற்ப வேலைகள், வர்ணம் தீட்டுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்து, விழாவிற்கு தயாராகி, புது பொலிவுடன் தேர் தற்போது காட்சி அளிக்கிறது. மேலும், சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டதால், இந்த மாதம் 18 மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் பெரிய தேர் திருவிழா, புதுப் பொலிவுடன் நடைபெற உள்ளது. இதை காண, பக்தர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.