பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
12:04
பவானி: பவானி ஆற்றில், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில், சிவனடியார்கள் கூட்டம் களமிறங்கியுள்ளது.
பவானி நகருக்கு பெருமை சேர்க்கும் கோவிலாக, சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் நடுவில் அமைந்துள்ளது. இதனால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, சுற்றுலா ஸ்தலம், பரிகார ஸ்தலம் என பல சிறப்பை பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற கோவிலின் ஒரு பகுதியில், பவானி ஆற்றின் காளிங்கராயன் தடுப்பணை முதல், கூடுதுறை வரை பார்க்கும் இடம் எல்லாம் தண்ணீரில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன. கரையோரங்களில் சீமைக் கருவேல மரங்கள், முட்புதர்கள் வளர்ந்து ஆற்றின் இயற்கை தன்மைக்கும், தூய்மைக்கும் மாசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பவானி, சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை மற்றும் கோவை, மங்கையர்கரசியார் அருட்பணி அறக்கட்டளை இணைந்து, பவானி ஆற்றை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை, 7:00 மணியளவில், சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், நிர்வாகிகளான சரவணகுமார், மோகன்ராஜ், பாலாஜி முன்னிலையில், அமைச்சர் கருப்பணன் பணியை துவக்கி வைத்தார். ஐந்து ஜே.சி.பி., இயந்திரங்கள், ஒரு மோட்டார் படகு, இரண்டு தற்காலிக படகுகள் உதவியுடன் ஈரோடு, பவானி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 1,000 சிவனடியார்கள், ஆகாயத்தாமரை செடிகள், கரையோர சீமைக்கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.