பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
01:04
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, 60லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 தங்கும் அறைகள் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. சுயம்பு மூர்த்தி திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நடராஜபெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் சபைகளில் முதல்சபை, ரத்தின சபையாக இக்கோவில் விளக்குகிறது. காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்து இருக்கும் திருக்கோவில் இது. இப்படி சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கமலத்தேர், ஆருத்ரா அபிஷேகம் போன்ற முக்கிய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாந்தீஸ்வரர் பூஜை இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மே லும், கோவிலில் பக்தர்கள் தோஷங்கள் நீங்குவதற்கு, மாந்தீஸ்வரர் பூஜை நடக்கிறது. கோவிலில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்துவர். இதற்கு பக்தர்கள் முந்தைய நாள் இரவே , கோவில் வளாகத்தில் தங்கி, மாந்தீஸ்வரர் பூஜை நடத்துகின்றனர். இப்படி பூஜை செய்யும் பக்தர்களுக்கு தங்குவதற்கு கோவில் வளாகத்தில் அறைகள் இல்லாததால், கடும் சிரமப்பட்டனர். இதை யடுத்து, பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் குறைந்த வாடகையில் அறைகள் கட்டி பக்தர்கள் பயன்பாட்டிற்கு விட தீர்மானித்து திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது.
10 அறைகள்: இது குறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: வடாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு, முதற்கட்டமாக, 10 அறைகள் கட்டுவதற்கு தீர்மானித்து, கோவில் பொதுநிதியில் இருந்து, 60 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, இந்து அறநிலைய துறை ஆணையரின் அனுமதிக்காக, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன், பணிகளுக்குடெண்டர் விடப்பட்டு, ஆறு மாதத்தில்அறைகள் கட்டி, பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.