பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
06:04
சிவகாசி: சிவகாசி சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றம் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. சிவகாசியில் சிறுகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து வீடு கட்டி 200 பேர் தந்தை பெரியார் காலனி என்ற பெயரில் குடியிருந்து வருகின்றனர். வீடுகள் முன் 30 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. நீர்நிலை ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என சிவகாசி வட்டார வரி செலுத்துவோர் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன ர். 2011 அக்டோபர் 19 ல் ஆக்கிரிப்பை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.கோர்ட் உத்தர விட்டும் வெகுநாட்களாக ஆக்கிரமிப்பு அகற்றாததால், மார்ச் 15 ம்தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 2012 அக்., 18 ல் ஆக்கிரமிப் புகளை அகற்ற ஏற்பாடு நடந்தது.ஜே.சி.பி., எந்திரம்கொண்டு அதிகாரிகள் முதல் 10 வீடுகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அங்கு குடியிருந்த ஆட்டோ டிரைவர் கணேசன், 40 உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் குடியேறினர். உச்சநீதிமன்றதில் மாவட்ட நிர்வாகம், அரசின் சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுத்து 2014ம் ஆண்டுக்குள் ஆக்கிரமிப்பு அகற்றிவிடுவதாக ‘அபிடவிட்’ தாக்கல் செய்தது. இதையடுத்து, ஆணையூர் ஊராட்சியில் 3 ஏக்கர் பரப்பில் ரூ.10.92 கோடியில் குடிசை மாற்று வாரியம் 2 அடுக்குமாடி கொண்ட 11 பிளாக்குகளில் 126 வீடுகள் கட்டி முடித்து, கடந்த 2015 ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஒவ்வொரு வீடுகளிலும் 10 க்கு 10 அளவில் பெரிய ஹால், கிச்சன், பாத்ரூம், டாய்லெட், பெட்ரூம் வசதிகளுடன் 900 சதுர அடியில் கட்டப்பட்டு, வீடுகளு க்கு தனி மின் இணைப்பு, குடிநீர், சமுதாய கூடம், ரோடு வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் சம்மந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. ஆக்கிரமிப்பு இடத்திலேயே குடியிருந்து வந்தனர். இதற்கு துணை யாக அங்கு ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தவர்கள் செயல்பட்டனர். எதிர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்தது. சுப்ரிம் கோர்ட் மீண்டும் ஆணித்தனமாக 2015 அக்., 17 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட்டு மாவட்ட கலெக்டரிடம் பதிலறிக்கை தாக்கல் செய்ய கோரியது. அதன்பின் கடந்தாண்டு அக்., 15ம் தேதி மாவட்ட எஸ்.பி.,ராஜராஜன் தலைமையில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு 34 கடைகள் மட்டும் ஜே.சி.பி., எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டன. ஆனால் வீடுகள், கோவில்கள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் காலை 11 மணியளவில் வீடுகளை தவிர கண்மாய் துவக்கத்தில் இருந்த சக்தி விநாயகர் கோயில், எஸ்.எப்.ஆர்., கல்லுõரி எதிரே உள்ள விநாயகர் கோயிலை இடித்து அப்புறப்படுத்தினர். சிவகாசி தாசில்தார் ஸ்ரீதர், சிவகாசி நகராட்சி ஆணையாளர் ராஜன், டவுன் இன்ஸ்பெக்ட்ர் பாஸ்கரன் உட்பட அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். பணி துவங்கிய சிறிது நேரத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் குவியத்துவங்கினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அடுத்த மாதத்திற்குள் வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தபடுமென அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு கோவில்கள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சிவகாசி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டிருந்தது.