பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
11:04
ஆர்.கே.பேட்டை;திரவுபதியம்மனுக்காக காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், நடப்பு ஆண்டில் முதல் கோவிலாக, ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்து முடிந்தது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கு பின் துவங்கிய இந்த உற்சவத்தில், திரளான இளைஞர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு இருந்தனர்.கடந்த, 6ம் தேதி இரவு, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து துவங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பூங்கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 18ம் நாள் போர்க்கள நிகழ்வில், துரியோதனனை, பீமசேனன் வீழ்த்தினான். அன்று மாலை கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரளான பக்தர்கள் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.பிரம்மாண்ட வாண வேடிக்கையுடன் நடந்த திருவிழாவில், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து, நேற்று காலை, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.இரவு, 7:00 மணிக்கு, தர்மராஜா, நகர் வலம் வந்தார். ராஜாவுக்கு பகுதிவாசிகள், ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.