பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
12:04
ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவ பெருமாள் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பெருக்குடன் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஸ்ரீ பெரும்புதுாரில் ராமானுஜரின் அவதாரதலமான ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, ஏப்ரல் 22 முதல், மே 1 வரை விமரிசையாக நடைபெறஉள்ளது. இதற்கு முன்னதாக, ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஏழாவது நாளான, நேற்று காலை, திருத்தேர் விழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, தேர் நிலையில,இருந்து, காலை , 8:00 மணிக்கு புறப்பட்டது. காந்தி சாலை, திருவள்ளூர் சாலை , சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெரு வழியாக வலம் வந்து, பகல், 2:00 மணிக்கு நிலையை அடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.