பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
12:04
சென்னை: வைத்தியநாத சுவாமி கோவில், ஜீர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக அரங்கேறியது. ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது, தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில். இக்கோவில் பாலாலயம் செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, ஏப்., 14ம் தேதி யாகசாலை வளர்க்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை , வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, ஏப்.,15ம் தேதி காலை , கணபதி, நவகிரஹ, சுதர்ஸன, ஸ்ரீசுத்த ஹோம ங்கள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலை, நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தது. இதையடுத்து, யாத்ரா தானம், மகா பூர்ணாஹுதி நடந்தது. காலை , 9:00 மணிக்கு கடப்புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை , 9:30 மணிக்கு மூலவர், அம்மன் விமானங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொர்ந்து பரிவார மூர்த்திகளுக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகளை, மூத்த வழக்கறிஞரான, பி.பி.ராமானுஜம் செய்திருந்தார்.