பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
01:04
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் குளங்களை, இரு மாதங்களுக்குள் சுத்தப்படுத்த வேண்டும் என, அம்மாநில அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள இரு குளங்களை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி, ஜே.எஸ்.ஹேகர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள இரு குளங்களை சுத்தப்படுத்த, கேரள மாநில குடிநீர் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, இரண்டு மாத அவகாசம் வழங்கப்படுகிறது. கோவில் குளத்தில், கழிவுநீர் கலக்காமல் தடுக்க வேண்டும். இது தொடர்பாக, இரு வாரங்களுக்குள், நிலவர அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, மே, 3க்கு ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.