சேதமடைந்த திருப்புல்லாணி சக்கரதீர்த்தக்குளம்: சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2017 02:04
கீழக்கரை: திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள சக்கர தீர்த்தக் குளத்தின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளது. மழை நேரங்களில் குளத்தில் கழிவு நீர் கலந்து வருகிறது. குளத்தை சீரமைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் கோயில் 44வது திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு பட்டாபிஷேக ராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் கோயில் முன்புறமுள்ள சக்கர தீர்த்தக்குளத்தில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் செல்வார்கள். சக்கரத்தீர்த்தக்குளம் ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.
1999 ல் கலெக்டராக இருந்த விஜயகுமார் முயற்சியால், குளம் முழுவதுமாக துார்வாரப்பட்டு, வெளியில் உள்ள மண், கழிவு நீர் குளத்திற்குள் செல்லாதவாறு, 12 அடி உயர தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. கடலுக்கு வீணாக செல்லும் மழைநீரை தடுத்து, பெரிய குழாய்கள் மூலம் தீர்த்தக்குளத்தில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. கோடையிலும் வற்றாமல், தீர்த்தக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு, தீர்த்தக்குளத்தின் வடக்குப்பகுதி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, மணணில் புதைந்தது. இதன் காரணமாக மழைகாலங்களில் கழிவுநீரும் தீர்த்தக்குளத்தில் வந்து கலக்கும் நிலையில் உள்ளது. புதியதாக தடுப்புச்சுவர் எழுப்பிடவும், பலமிழந்த சுவர்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.