பதிவு செய்த நாள்
19
ஏப்
2017
02:04
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் குளத்திற்கு தண்ணீர் வரும் வடிகாலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தலத்திற்கு தினந்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். விஷேச தினங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். கோவிலினுள் பிரம்மதீர்த்த குளமும், வெளியே ஆதிஷேச தீர்த்த குளமும் உள்ளன. வெளியே இருக்கும் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு, சுற்றியுள்ள தெருக்களில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர், இதன் வழியாக குளத்தில் வந்து தேங்கும்.நாளடைவில், வடிகால்களில் பகுதிவாசிகள், கழிவுநீர் குழாய்களை இணைத்து விட்டனர். இதனால், வடிகால்கள், சாக்கடைமயமாக உள்ளன. அதில் குவிந்துள்ள பிளாஸ்டிக்கழிவு மற்றும் அடைப்பு காரணமாக குளத்திற்கு மழைநீர் வருவது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த , 10 ஆண்டுகளாக, குளம் நிரம்பவே இல்லை. கடந்த , 2015 டிசம்பரில் பெய்த பெருமழையின் போது கூட, இந்த குளம் நிரம்பவில்லை. எனவே , வடிகாலில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், மண் குவியலை அகற்றுவதுடன், வடிகாலில் இணைக்கப்பட்டிருக்கும் முறைகேடான கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோடையிலே இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.