பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
11:04
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 7ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள புராதன திரவுபதியம்மன் கோவிலில். நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை மகாபாரதம், நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும், 24ம் தேதி முதல், மே மாதம், 7ம் தேதி வரை, இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகம் நடைபெறும். வரும் 26ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், மே 7ல் துரியோதனன் படுகளம், தீமிதி விழா நடக்கிறது.