பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
11:04
குன்னுார்:குன்னுார் தந்திமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
குன்னுார் தந்திமாரியம்மன் கோவில் திருவிழா, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு, உபயதாரர்களின் அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு கட்டமாக, குன்னுார் ராஜாஜி நகர் மற்றும் மாடல் ஹவுஸ் பகுதி மக்கள் சார்பில், ரிஷப வாகன ஊர்வலம் நடந்தது. ராஜாஜி நகரில் அமைந்துள்ளமுனீஸ்வரர் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், ரிஷப வாகனத்தில், மவுன்ட் ரோடு, பஸ் நிலையம் வழியாக, தந்திமாரியம்மன் கோவிலுக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு, அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னுார் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் ஒரு பகுதியாக, கேரளா சேவா சங்கம் சார்பில், 72வது ஆண்டு முத்துப்பல்லக்கு, இன்று பகல், 3:30 மணிக்கு நடக்கிறது.