பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
11:04
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி, மண் சோறு சாப்பிட்டும், துஷ்டர்களை விரட்டியும், பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.வாவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்திரிபாளையம் பகுதி பொதுமக்கள், மழை வேண்டி பாரம்பரிய முறைப்படி நேற்று வழிபாடு நடத்தினர். வறட்சி எனும் துஷ்டனை விரட்டும் வகையில், உருவ பொம்மை செய்து பாடை கட்டி, வீதிகளில் ஊர்வலம் வந்தனர். ஊருக்கு மத்தியில் வறட்சி துஷ்டனை வைத்து, கும்மியடித்து பாடல்கள் பாடி, ஒப்பாரி வைத்தனர். பின், ஊர்வலமாக எடுத்து சென்று, ஊர் எல்லையில் எரித்தனர். ஊர்வலத்தின் போது, வீடுகள் தோறும் சென்று சோறு வாங்கி, அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து, பொதுமக்கள் பகிர்ந்து உண்டனர். பொதுமக்கள் கூறுகையில், "கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே ஊர் பொதுமக்கள் சார்பில், மழை வேண்டி வழிபாடு நடத்தினோம். வறட்சி காலங்களில் இந்த பாரம்பரிய வழிபாட்டினை மேற்கொண்டு வருகிறோம். சோறு பகிர்ந்து சாப்பிடுவதுடன் இன்றை நிகழ்ச்சி முடிந்தது. மறுநாள் விநாயகருக்கு, 1,008 குடம் தண்ணீர் ஊற்றி, பொங்கல் வைத்து வழிபாடு செய்வோம், என்றனர்.