பதிவு செய்த நாள்
21
ஏப்
2017
12:04
நரசிங்கபுரம் : நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள அரச மரத்தடி விநாயகருக்கு, வரும் 24ல், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பேரம்பாக்கம் அடுத்துள்ளது நரசிங்கபுரம். இங்குள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகருக்கு, வரும் 24ல், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
முன்னதாக, வரும் 23ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும், புதிய விநாயகர் சிலை கரிகோலம் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும், புதிய சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.
பின், மாலை 6:00 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜையும், அஷ்டபந்தனம் சமர்ப்பணமும் நடைபெறும். மறுநாள் 24ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடைபெறும்.
காலை 9:00 மணிக்கு, ஓம் சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆரியமர்ந்தாள், சக்தி மாரியம்மன், நாகாத்தம்மன் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, அரச மரத்தடி சக்தி விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதன் பின், மாலை 6:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், விநாயகர் மற்றும் மாரியம்மன் வீதியுலா நடைபெறும்.