பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
11:04
கிளாம்பாக்கம் : வரலாற்றுத் தொடர்புகளை விளக்கும் சான்றாக, கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகளையும், கோயில்களையும் பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வெட்டு கிடைத்தது: இந்திய வரலாற்றில், அசோக சக்கரவர்த்திக்கு அடுத்ததாக, தெற்கே ஈழம் முதல், வடக்கே துங்கபத்திரை நதி வரையுள்ள பெருநிலப் பகுதியை, ஒரு குடையின் கீழ் கொண்டு ஆண்ட மன்னன் என்ற பெருமை, ராஜராஜ சோழனுக்கு உண்டு. உலகமே வியக்கும், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கள், கிளாம்பாக்கத்தில், பல நுாற்றாண்டுகளாக கிடக்கின்றன. கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கிளாம்பாக்கம் கிராமத்தில் உள்ள, செல்லியம்மன் கோவில் அருகே இக்கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சாதாரண கற்களாக கருதி, கண்டு கொள்ளாமல் விட்டிருந்த நிலையில், இதன் உண்மையை உலகறிய செய்ய, சில காலம் பிடித்திருக்கிறது. பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், புதுப்புது குடியிருப்புகள் போன்றவற்றால், ஊரப்பாக்கத்தை அறிந்திருக்கும் பலரும், தொன்மையான கிளாம்பாக்கத்தை அறிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.
1,000 ஆண்டுகள் பழமை: கிளாம்பாக்கம், ரயில்வே இருப்பு பாதையை ஒட்டி அமைந்துள்ள செல்லியம்மன் கோவில் அருகே கிடைத்த நான்கு கல்வெட்டுகளும், முதலாம் ராஜராஜனின் காலத்தை சேர்ந்தவை என, தொல்பொருள் ஆய்வாளர்கள் சான்றளித்துள்ளனர். இவை, நான்கும், கிளாம்பாக்கத்தில் உள்ள களந்தை நக்கரீஸ்வரர் கோவில் குறித்து விளக்குகின்றன. இவை, கி.பி., 1004ம் ஆண்டை சார்ந்தவை என, அறியப்படுகின்றன. இதன் மூலம், கிளாம்பாக்கத்தின் பெருமையையும், புகழையும் அறிய முடிகிறது.முதலாம் ராஜராஜன், கி.பி., 985ல், அரியணை ஏறினார். இவரது ஆட்சிக்காலத்திற்கு முன்னரே, கிளாம்பாக்கத்தில், சிவபெருமானுக்கு கோவில் வழிபாடு நடந்துள்ளது. இக்கோவிலுக்கு, விளக்குக்காக நெய்யளிக்க, ஆடுகள் கொடையளிக்கப்பட்டுஉள்ளதை, இக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால், கல்வெட்டில் காணப்பட்ட சிவன் கோவில், இன்று இங்கில்லை. அது கட்டப்பட்ட ஆண்டை போலவே, எப்போது, எப்படி அழிந்தது என்பதற்கும் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இன்று, கிளாம்பாக்கம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் அடங்கிய கிராமமாக உள்ளது. இது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வகுக்கப்பட்டு, விடுதலைக்கு பின், திருத்தியமைக்கப்பட்ட அரசியலமைப்பு நிகழ்வாகும். ஆனால், பண்டைய நாட்டு பிரிவில், கிளாம்பாக்கம், தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த, புலியூர் கோட்டத்துக்குட்பட்ட, நெடுங்குன்ற நாட்டில் அடங்கியிருந்துள்ளது.புலியூர் கோட்டத்தின் தலைமையூரான புலியூர், அதன் பெருமையை மறைத்து, சென்னை, வடபழனியின் ஒரு பகுதியாக அடங்கிக் கிடக்கிறது என்கின்றனர், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். நெடுங்குன்ற நாட்டின் தலைநகரான நெடுங்குன்றம், வண்டலுாரை அடுத்த சிற்றுாராக மாறியுள்ளது. நெடுங்குன்ற நாட்டைச் சேர்ந்த, சிற்றுார்களில் ஒன்றே கிளாம்பாக்கம். தற்போது, ஊரப்பாக்கத்தில் அடங்கிப்போயுள்ளது.
கிளாம்பாக்கம் - பெயர்க்காரணம்: தமிழகத்து ஊர்கள் யாவும், அவற்றின் இடங்களில் உள்ள மரம், செடி, கொடி, ஆறு, ஓடை, மலை முதலான இயற்கை வளங்களில், சிறந்த ஒன்றால் அடையாளங்காணப்பட்டு, அப்பெயர் பெறுவது மரபாகும். அதன்படி, தொண்டை நாடானது, முல்லை நிலச் சிறப்பு பெற்றிருந்து இருக்கிறது. இப்பகுதிகளில், களாச்செடிகள் செழித்து வளர்ந்திருந்ததால், களாம்பாக்கம் எனப் பெயர் பெற்று, நாளடைவில் மருவி, கிளாம்பாக்கம் என, மாறியதாக கூறப்படுகிறது. பாக்கம் என்பது, கடற்கரையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளுக்கான பொதுப்பெயராக அறியப்படுகிறது என்கின்றனர், சமூக, வரலாற்று அறிஞர்கள். மண்ணின் மரபு மாறாத, இயற்கையான பெயர் அமைப்பினாலும், நீண்ட நெடிய காலப் பழக்கமான பெயர்மாற்றப் பண்பினாலும், தொன்மையான நாட்டுப்பிரிவில் இடம் பெற்ற ஊராக இருப்பதாலும், கிளாம்பாக்கம் பழைய ஊர் என, நம்பப்படுகிறது. விளக்குக்கு ஆடு, மாடுகள் கொடைகிளாம்பாக்கத்தில் கிடைத்த நான்கு கல்வெட்டுகளில், புலியூர் கோட்டத்து, நெடுங்குன்ற நாட்டு, கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த, பொன்னக் களந்தை என்பவர், 45 ஆடுகளையும், வல்லங்கிழான் என்பவர், 45 ஆடுகளையும், சிங்கள் ஐநுாற்றான் என்பவர், 45 ஆடுகளையும், களந்தை மன்றாடி மற்றும் அவரது தம்பி இணைந்து, 45 ஆடுகளையும், கோவில் விளக்குக்கு, நெய்யளிக்க தானமாக வழங்கியதை குறிப்பதாக, தொல்பொருள் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.கோவில் விளக்குக்கு நெய்யளிப்பது, அன்று சிறந்த அறமாக கருதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில், ஒவ்வொருவரும் சென்று நெய்யளிக்க முடியாது என்பதால், ஆடு, மாடு, எருமை போன்றவற்றை கொடையாக அளித்துள்ளனர்.
ஒரு விளக்கேற்ற, 90 முதல் 96 ஆடுகள் அல்லது 48 மாடுகள் அல்லது 24 எருமைகள் என்ற அப்போதைய நிலைக்கணக்கின் படி, அரை விளக்கேற்ற, 45 ஆடுகளை மேற்கண்ட முன்னோர்கள் கொடையளித்ததை, இக்கல்வெட்டுகள் விளக்குகின்றன.இக்கல்வெட்டுகளில் ஒன்று, மாநில அரசின் தொல்லியல் துறையினரால் தற்போது, சென்னை அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படுகிறது.
கோவில்கள் பெருமை: தமிழகத்தின் பழமையான ஊர்களில், ஊரின் நடுவில் பெருமாள் கோவிலும், வடக்கில் கொற்றவை கோவிலும், வட கிழக்கில் சிவன் கோவிலும் இருக்க வேண்டும் என்பது ஊரமைப்பு நெறிமுறையாக இருந்துள்ளது. அதன் படி, கிளாம்பாக்கத்தில், களந்தை நக்கர் சிவன் கோவிலும், செல்லியம்மன் கோவிலும் இருந்திருக்கிறது. ஊர் நடுவே இருந்திருக்க வேண்டிய பெருமாள் கோவில், அழிந்து போயிருக்கும் என, கூறப்படுகிறது.அதேபோல், தாய் தெய்வ வழிபாடாக, தற்போதைய கோலாட்சியம்மன் எனப்படும் கோலவிழியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. கோலவிழியம்மன் எனும் பெயர், வடமொழியாதிக்கத்திலும், பல மரபினர் ஆட்சி யிலும் மாறி, கோலாட்சியம்மன் கோவில் என, வழங்கப்படுகிறது. இன்று, கிளாம்பாக்கம் மட்டுமின்றி, அண்டை ஊராரும் அறிந்து வந்து தொழும் சக்தி வாய்ந்த கோவிலாக இக்கோவில் அறியப்படுகிறது.
சுற்றிலும், கலை: வண்ணப் பெருமாள் ஆலயம், விநாயகர் கோவில், களந்தை நக்கரீஸ்வரர் கோவில், கோலாட்சியம்மனின் அக்காவாகக் கருதி வழிபடும் செல்லியம்மன் கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன.பாதுகாப்பு தேவைகல்வெட்டு சான்றுகளாலும், ஊர்ப்பெயர் காரணத்தினாலும், கோவில் மரபுகளாலும், பழமையான ஊராக கிளாம்பாக்கம் அறியப்படுகிறது. ஆனால், இதன் பழமையை பறைசாற்றும் கல்வெட்டுகள், சாலையோரம் சாதாரணகற்களாகவே கிடக்கின்றன. இது, பழமை போற்றி கள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். வரலாற்றுப் பாரம்பரியமிக்க, கிளாம்பாக்கம், நந்திவரம் போன்ற ஊர்களைப் பராமரிக்கவும், அதன் பழமையை பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், இவ்வூர்களின் பெருமை, காலம் கடந்தும் பறைசாற்றும்.
கிளாம்பாக்கத்தில் யாரையும் பாம்பு கடிக்காது!
அம்மன், நாக பாம்பு உருவெடுத்து வந்த போது, சப்பாத்தி முட்கள் நிறைந்த படலில் சிக்கி, நகர முடியாத நிலை ஏற்பட்ட போது, இவ்வூர் உழவர் ஒருவர் அம்மனை, முட்படலத்தில் இருந்து காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், கிளாம்பாக்கத்தில் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிர்களுக்கு பாம்புகளால் தீங்கு ஏற்படுவதில்லை என, அம்மன் சான்றளித்தாக ஊர்மக்களால் நம்பப்படுகிறது. இதுவரை, பாம்புக்கடியால் இவ்வூரார் யாரும் உயிரிழந்த வரலாறு இல்லை எனவும், இவ்வூர் மக்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.