பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
01:04
குன்னுார்: குன்னுாரில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில், திருநங்கையர் ஆடிய அட்டப்பாடி ஆதிவாசிகளின் உலக்கையாட்டம், அவர்களின் திறனை பறை சாற்றுவதாக இருந்தது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா நடந்து வருகிறது. இதில், பல்வேறு கலாசார கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னுாரில் நடந்த முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்பொலி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதில், சோனா என்பவர் தலைமையில், கிச்சு, ஷஜின், ஷகீர், அணு, சுதே ஆகிய திருநங்கையர் நிகழ்த்திய கலாசார நடனம் பார்வையாளர்களை வியப்படைய வைத்தது. அதிலும், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி ஆதிவாசிகளின் உலக்கையாட்டம் அனைவரையும் கவர்ந்தது.
எழுத்தாளர், போலீஸ் பணி போன்று பல்வேறு களங்களிலும் சாதிக்கும் திருநங்கையர், கலை நிகழ்ச்சிகளிலும் சாதனை புரிந்து வருவது குறித்து கேட்டபோது, சிலம்பொலி குழுவில் உள்ள சோனா, கூறியதாவது: கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து, எங்கள் குழுவினர் அனைவரும், பல சிறிய குழுக்களாக பிரிந்து, சித்திரை மாதங்களில், பல்வேறு இடங்களில் நடக்கும், கலாசார நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறோம். ஒரு முறை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடிக்கு சென்ற போது, அங்கு கண்ட ஆதிவாசி மக்களின் கலாச்சார நடனம் எங்களை மிகவும் கவர்ந்தது. அந்த நடனங்களை பழகி அவற்றில், பிரதானமான உலக்கையாட்டத்தை குன்னுாரில் அரங்கேற்றினோம். நாங்கள் பிற இடங்களில் பழகிய நடனங்களை, அட்டப்பாடியில் உள்ள ஆதிவாசி மாணவ, மாணவியருக்கு சொல்லி கொடுத்துள்ளோம்.
நாங்கள் ‘டிவி’யில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை விட, நேரடியாக தெருக்களில் நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்கும் போது, மக்கள் நேரடியாக வந்து எங்களை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அரசு சார்பில் எங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்றாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் தொகையில், அலங்காரத்திற்கும், உடைக்கான செல்வு போக, மீதமுள்ள தொகையில் கவுரவமாக வாழ்க்கை நடத்தி வருகிறோம். இவ்வாறு, சோனா கூறினார். கலை நிகழ்ச்சிகளை போலவே, ஆங்கிலம், தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் சர்வசாதாரணமாக பேசி கலக்கிய இவர்களை, திருவிழாவுக்கு வந்த அனைவரும் பாராட்டி சென்றது, திருநங்கையர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.