பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
02:04
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.(24/04/2017) இதை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலும் ஹாலில் பிரதானமாக காணப்படும் சாய்பாபாவின் மகா சமாதியும் பல்வேறு விதமான மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு சாய் பஞ்சமிர்த கீர்த்தனைகள் இயற்றப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா மற்றம் மகராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர்கள் 265 பேர் ஒன்றுகூடி இந்த கீர்த்தனைகளை இசைத்தனர். ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது.
அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்.
* அன்பு வழியில் ஆண்டவனின் பக்தியில் ஈடுபடுங்கள். உங்கள் குழப்பம் யாவும் மறைந்து விடும்.* படிப்பில் மட்டுமின்றி, நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்.
* சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டும்.
* தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலரும். மற்றவை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
* உண்மை, தர்மம், கருணை, மன்னிக்கும் மனப்பான்மை, இவற்றை பெற வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
* மனதை - தூய்மையாக - முழுமையாக வைத்துக்கொள். வெற்றி பெறுவாய்.
"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.
-எல்.முருகராஜ்