பதிவு செய்த நாள்
25
ஏப்
2017
10:04
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு நேற்று யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் நடந்தன. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே 1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கின.
நேற்று காலை மூலவர் விநாயகர் சன்னதியில் கொடிமரம் மண்டபத்தில் அனுக்ஞை நடந்தது. தொடர்ந்து தங்கம்,வெள்ளி,உலோக நாணயங்களால் தன பூஜை, கோ பூஜை, கஜ பூஜைகள் நடந்தன. பகல் 11:30 மணி அளவில் கொடிமரத்திற்கு முன் கணபதி ஹோமம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. மாலையில் கிழக்கு ராஜகோபுரம் அருகே பிரவேச பலி, ரக்ஷன ஹோமம் உள்ளிட்டபூஜைகள் நடந்தன. தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடந்தன.பரம்பரை அறங்காவலர்கள் நற்சாந்துப்பட்டி அழ.பெரியகருப்பன், காரைக்குடி நா.மாணிக்கவாசகன் பங்கேற்றனர். இன்றும், நாளையும் பூர்வாங்க பூஜைகள் தொடரும். ஏப்.,27 ல் மாலையில் முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கும்.தொடர்ந்து மே 1ம் தேதி அதிகாலை வரை எட்டு கால யாகசாலை பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற உள்ளன.அன்று காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:00 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.