பதிவு செய்த நாள்
25
ஏப்
2017
12:04
உத்தமசோழபுரம்: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேரோட்ட திருவிழாவையொட்டி, நேற்று முகூர்த்தகால் நடப்பட்டது. உத்தமசோழபுரம், பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலின் முக்கிய திருவிழாவான, சித்திரை தேரோட்ட விழாவுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி, வீரபாண்டி எம்.எல்.ஏ., மனோன்மணி தலைமையில் நேற்று நடந்தது. மே, 8 காலை சித்திரை தேரோட்டத்துக்கான கொடியேற்றம் நடக்கிறது. 9ல், கரபுரநாதர் பிச்சாண்டார் திருக்கோலத்தில் காட்சியளிப்பார். மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேரோட்டம் மே, 10 மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. 11ல், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 12 மாலை ஊஞ்சல் உற்சவம், 13ல் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் தேரோட்ட விழா நிறைவு பெறும். நேற்று ஹேவிளம்பி ஆண்டின், முதல் பிரதோசம் சிவனுக்கு உகந்த திங்கள் கிழமையாக வந்துள்ளது. இதையொட்டி, நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டன. பெரியநாயகி சமேத கரபுரநாதர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்ட ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கலைச்செல்வி செய்து வருகிறார்.