பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
நாமகிரிப்பேட்டை: ஒடுவன்குறிச்சி தேர் திருவிழாவில்பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன் குறிச்சி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, மார்ச், 9ல் துவங்கியது. விழாவானது, கடந்த, 21ல் இருந்து, ஏழு நாட்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்படும். நேற்று அதிகாலை, பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள் ராஜா, ஆனந்த், அரவிந்த் ஆகியோர்
பூச்சட்டியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சட்டியை மாற்றும் முன் முட்டி போட்டு நடந்து வந்தனர். பின், பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீறாக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து, சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்த பூசாரி ராஜா பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். இந்த
வினோத பழக்கம், 40 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து, பெண்கள் மட்டும் பால் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலம் வந்தனர். இன்று, தேர் வடம் பிடித்தல் மற்றும் அக்னி
குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.