17ம் நுாற்றாண்டு வீரக்கல் கற்சிற்பம் பழநியில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2017 11:04
பழநி: பழநி அருகே கணக்கன்பட்டியில் 17ம் நுாற்றாண்டு போரில் இறந்த வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் பழநி கணக்கன்பட்டி பஸ்நிறுத்தம் அருகே உள்ள பொதுச்சாவடியில் பலஆண்டுகளாக ஒரு கற்சிற்பம், துாண் மீது வைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தகவலறிந்த பழநி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் அச்சிலையை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: பழநி பகுதியில் போரில் மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வீரக்கல் நடுவது மரபாக இருந்தது. சங்க இலக்கியங்களில் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த வீரர்களை பற்றி பல குறிப்புகள் உள்ளன. அவர்கள் நினைவாக எழுப்பப்படும் கற்சிற்பம் வீரக்கல் என அழைக்கப்படுகிறது.
பொதுச்சாவடியில் உள்ள சிற்பங்களை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு வீரர்கள் நின்ற நிலையில் கை கூப்பியவாறும், இடது கைக்குள் ஒரு வாளை வைத்துக் கொண்டும், இடுப்பின் வலதுபுறம் ஒரு வாள் சொருகிய நிலையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரு வீரர்களின் தலையலங்காரமும், பக்கவாட்டு கொண்டையும், காதணிகளும், தோள்பட்டையை தொட்டவாறும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இத்தகைய வரலாற்று முக்கியம் வாய்ந்த வீரக்கல் சிலையை அருங்காட்சியத்திற்கு வழங்கவேண்டும் என, தாசில்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நமது பண்பாட்டை விளக்கும் சிற்பங்களை பாதுகாப்பதால் நமதுபகுதி வரலாறு அழியாமல் தடுக்கமுடியும், என்றார்.