சீர்காழி சட்டைநாதர் கோயில் கோபுரத்தை ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2017 05:04
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமை ஆதிகத்தின் ஆட்சிக்கு உட்பட்ட இக்கோயிலில் சிவபெருமான் மூன்று நிலை களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 1991ம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 26ஆண்டுகளாகியும் கோயில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் தற்போது கோயிலில் உள்ள சிற்பங்கள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதுடன், மேல கோபுரம் மற்றும் முருகன் சன்னதி கோபுர கலசங்களும் காற்றில் கீழே விழுகின்றன.
கோபுர கலசங்கள் விழுந்ததால் பக்தர்கள் தீமைகள் நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தருமை ஆதின குருமகா சன்னிதானம் மற்றும் ஆதின கட்டளை தம்பிரான்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழாவின் போது மட்டுமே இந்த கோயிலுக்கு வரும் நிலையில் நிர்வாகிகள் கோயிலை சரியாக பராமறிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ சட்டைநாதர் கோயி லின் வடக்கு கோபுரம் பழுதடைந்து கீழே இறங்க தொடங்கியது. அதனை தடுக்க கோயில் நிர்வாகம் தற்காலிகமாக இரும்புதூண்களை கொண்டு முட்டு கொடுத்துள்ளது. கோயிலின் ஆண்டு சித்திரைத் திருவிழா தொடங்க உள்ளது. முக்கிய திருவிழாவான திருமுலைப்பால் வரும் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழாவில் கலந்துகொள்ள வரும் லட்சக்கணக் கான பக்தர்களுக்கு ஆபத்து நேராமலிருக்க அரசின் கட்டடக்கலை வல்லுனர்களை கொண்டு பழுதடைந்த கோபுரத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தருமை ஆதின நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.