பதிவு செய்த நாள்
28
ஏப்
2017
06:04
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, கோயில் அடிவாரப்பகுதியான பளியன்குடியில் கொடியேற்றத்துடன் பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ராபவுர்ணமி விழா வரும் மே 10 ல் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக செல்வதால், விழா கொண்டாடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து, கடந்த 11 ம் தேதி தேக்கடியில் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மேலும், பக்தர்களுக்கு செய்யும் வசதிகள் குறித்தும் பேசப்பட்டது. இந்நிலையில், கண்ணகி கோயில் அடிவாரப் பகுதியான பழங்குடியினர் வசிக்கும் பளியன்குடியில், விழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், மழை அதிகம் பொழிய வேண்டும் என சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நேரு, சரவணன், கார்த்தி, ராஜா, சபரி மற்றும் கண்ணகி மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.