பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
01:04
திருப்பூர்:கணியாம்பூண்டி - முருகம்பாளையம் அழகர் அப்பச்சிபாறை, அங்கையற்கன்னி காம்பிகை உடனமர் ஆதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது; வரும், 1ல், கும்பாபிஷேகம் நடக்கிறது.முருகம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான, ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, மங்கள கணபதி, அங்கையற்கன்னிகாம்பிகை, ஆதீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரக நாயகர்களுக்கு தனிசன்னதிகள், பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும், 1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா துவங்கியது: நேற்று மாலை, 5:30 மணிக்கு, பொங்கவழி தோட்டம் செல்வவிநாயகர் கோவில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு, கணியாம்பூண்டி கிழக்கு விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மகா கணபதி வழிபாடு, எஜமான சங்கல்பம், நவகிரக ஹோமம், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை நடக்கிறது.
மே, 1ம் தேதி காலை, 9:15 மணிக்கு மேல், 10:15க்குள், ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்தி தானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.