பதிவு செய்த நாள்
04
மே
2017
12:05
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பஞ்ச ரத உற்சவ விழா, 6ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழா, 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்தி களுடன், தினமும் காலை, இரவுநேரங்களில் வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் அடுத்த முக்கிய விழாவான, தேர் திருவிழா, 6ம் தேதி சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தேர்கள் பொலிவுபடுத்தப்பட்டுள்ளன. கலசமும், கொடையும் பொருத்தி, தேருக்கு அலங்காரம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்விழாவை ஒட்டி தாம்பரம், சென்னை, செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர் பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில், உபயதாரர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.