பதிவு செய்த நாள்
06
மே
2017
01:05
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பழமையான கோயிலில் பல கோடி ரூபாயிலான தங்கம், வைரத்துடன் கூடிய கலசம் மாயாகியது. இதுகுறித்து ஓராண்டாக
விசாரணை இல்லை என, கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாலைக்கிராமம் கீழ்கங்கை ஊரணியில் 500 ஆண்டு பழமையான மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் விழா நடக்கும். இக்கோயிலில் சாலைக்கிராமம், குயவர்பாளையம், வலசைக்காடு, அய்யம்பட்டி, சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
2016 ஜனவரியில் இக்கோயில் கோபுர கலசம் மாயமானது. அதில் தங்கம், வைரம், வைடூரியம் இருப்பதால் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என, கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் கலசம் மாயமாகி ஓராண்டாகியும் போலீசார் வழக்கு பதியவில்லை; விசாரணையும் நடத்தவில்லை என, கிராமமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு சாலைக்கிராமம் பி.ராமன் கூறியதாவது: மாயமாவ கலசத்தின் மதிப்பு குறைந்தது 5 கோடி ரூபாய் இருக்கும். மகாலிங்கம் கோயில் கலசம் மாயமாவதற்கு ஓராண்டிற்கு முன்,
சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் திருக்காமகோடீஸ்வரி சன்னதி கோபுர கலசமும் மாயமானது.
இதன் மதிப்பும் பல கோடி ரூபாய் இருக்கும். இந்த 2 கோயில் கலசங்கள் குறித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. கலசங்கள் மாயமானது குறித்து பல சந்தேகங்கள்
கிராமமக்களிடம் நிலவி வருகிறது, என்றார். போலீசார் கூறியதாவது: வரகுனேஸ்வரர் கோயில் கலசம் குறித்து மட்டுமே புகார் வந்துள்ளது. மகாலிங்கம் கோயில் கலசம்
மாயமானது குறித்து யாரும் புகார் தரவில்லை. இருந்தபோதிலும் இரு கலசங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரித்த வருகிறோம், என்றனர்.