பதிவு செய்த நாள்
08
மே
2017
10:05
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மரகதவள்ளி மீனாட்சிக்கும், சொக்கத்தங்கம் சொக்கருக்கும் நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,28 கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் திருவிழாவான மே 5ல் மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடந்தது. ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி ரத்தினங்கள் இழைத்த செங்கோல்
அம்மனுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து மீனாட்சி அம்மன் மதுரையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும் சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் மதுரையை ஆளும் பட்டத்தரசி பொறுப்பை அம்மன் ஏற்றார் என்பது ஐதீகம். ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் அம்மன் அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலையை குறிக்கும் வண்ணம் திக்கு விஜயம் நடந்தது.
பத்தாம் நாள் விழாவான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கல்யாண மணமேடை வண்ண பூக்கள், வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன், பவளக்கனிவாய் பெருமாளும் மணமேடைக்கு நேற்று காலை 6:00 மணிக்கு எழுந்தருளினர்.
மணக்கோல அலங்காரத்தில் சுவாமி பிரியாவிடை, வைரகிரீடம், மாணிக்க மூக்குத்தி அணிந்து, பொன்னிற பட்டுடுத்தி மரகதவள்ளி மீனாட்சி காலை 7:30 மணிக்கு எழுந்தருளினர். அம்மன் பிரதிநிதியாக காலேஸ் பட்டர், சுவாமி பிரதிநிதியாக சந்தோஷ்பட்டர் இருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு கணேசன் பட்டர் தலைமையில் பூஜைகள் நடந்தன. கோயில், பாண்டிய மன்னர், மன்னர் திருமலை நாயக்கர் சார்பில் பட்டாடைகள் சாற்றுபடி நடந்தது. மல்லிகை, தாமரை, வெட்டிவேர், ஏலக்காய் மாலைகள் சாற்றுபடி செய்விக்கப்பட்டது. காலேஸ் பட்டர், சந்தோஷ்பட்டருக்கு காப்பு கட்டப்பட்டது. இருவரும் மாலைகள் மாற்றிக்கொண்டனர்.
அம்மன், சுவாமி பிரியாவிடையை மூன்று முறை வலம் வந்தனர். வைரக்கற்களால் இழைக்கப்பட்ட பொன் தாலிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நாதஸ்வரம் கெட்டி மேளம் முழங்க, சங்கொலிஒலிக்க மாணிக்க மூக்குத்தி மங்கையர்கரசி மீனாட்சி யின் கழுத்தில் வைரத்தாலியை காலை 8:44 மணிக்கு சொக்கர் சுந்தரேஸ்வரர் அணிவிக்க திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.
தீபாராதனைகள் முடிந்து பழைய திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் அம்மன் சுவாமி எழுந்தருளினர். பதினோராம் நாள் விழாவான இன்று (மே 8) கீழமாசி வீதியில் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது