பதிவு செய்த நாள்
09
மே
2017
11:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ விழாவில் நடந்த தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும், சித்திரை வசந்த உற்சவ விழா, கடந்த, 29ல் துவங்கியது. நேற்று அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் அய்யங்குளக்கரையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், அய்யங்குளத்தில் மதியம், 12:30 மணிக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. விழாவில், நேற்று இரவு கோபால் விநாயகர் கோவிலில் மண்டகப்படியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு கோவில், மூன்றாம் பிரகாரத்தில் வாணவேடிக்கையுடன் மன்மத தகன நிகழ்ச்சியும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.