சென்னை- மாமல்லபுரம் சாலையில் கோவளத்தை அடுத்து உள்ளது திருவிடந்தை. காலவ மகரிஷி தன் மகள்கள் 360 பேரையும் மணம் முடிக்க பெருமாளே வர வேண்டும் என தவமிருந்தார். அதை ஏற்ற பெருமாள், யாத்திரை செல்பவர் போல் வந்து, பெண்கள் அனைவரையும் ஒரே உருவமாக்கி, தன் இடதுபாகத்தில் ஏற்றார். வராக மூர்த்தியாக பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். திருமகளாகிய அப்பெண்ணை தன் இடதுபாகத்தில் வைத்த படியால் இத்தலம் திருவிடவெந்தை எனப்பட்டது. தற்போதுதிருவிடந்தை என்றாகி விட்டது. நித்ய கல்யாண கோலத்தில் காட்சி தரும் பெருமாள், ஆண்டின் 360 நாட்கள் ஒவ்வொரு பெண்ணாக திருமணம் செய்வதாக ஐதீகம். மீதி ஐந்து நாள் பிற சடங்குகளுக்காக ஒதுக்கி கொள்கிறார். பெருமாளின் ஒரு திருவடி பூமியிலும், மற்றொரு திருவடி ஆதிசேஷன் மீதுமாக உள்ளது. அவரது மடியில் அகிலவல்லித் தாயார் வீற்றிருக்கிறார்.