பதிவு செய்த நாள்
16
மே
2017
11:05
வேலூர்: குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழாவில், மூன்று லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
12ல் திருக்கல்யாணம், நேற்று முன் தினம் தேர்த்திருவிழா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிரசு ஊர்வலம் நேற்று நடந்தது. இதற்காக, குடியாத்தம், தர்ணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கெங்கையம்மன் சிரசுவுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் காலை, 5:00 மணிக்கு சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. செட்டித் தெரு, காந்தி ரோடு வழியாக, பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு ஊர்வலம் வந்தது. வழி நெடுகிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிரசு கெங்கையம்மன் கோவிலை அடைந்ததும், சண்டாளச்சியம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டது. அப்போது பெண்கள் அம்மனுக்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டு வந்தனர். பின் அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். சிரசு ஊர்வல திருவிழாவில், மூன்று லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் தலைமையில், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரம், 30 கேமராக்கள், எட்டு போலீஸ் மோப்பநாய்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. விழாவில், 200 அரசு சிறப்பு பஸ்கள் இயக்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.