ஒரு முதலாளியிடம் தொழிலாளி இறுதி வரைக்கும் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதற்கு பைபிளில், நீ மரண பரியந்தம் (இறக்கும் வரை) உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை (வாழ்வின் உயரிய பொருள்) உனக்கு தருவேன், என்ற வசனம் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் ஒரு விவசாயி இருந்தார். அவருடன் அவரது செல்ல நாயும் உடன் இருந்தது. அது அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தது.
அவர் எங்கு சென்றாலும், அந்த நாயும் உடன் சென்று விடும். ஒருநாள், அந்த விவசாயி இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்த இடத்தில் கல்லறை கட்டப்பட்டது. அந்த நாய் கல்லறை அருகே போய் படுத்துக் கொண்டது. அதை விட்டு நகரவே இல்லை. யாராவது எதையாவது கொடுத்தால் சாப்பிடும். மற்றபடி பசிக்காக கூட அங்கிருந்து நகரவில்லை. இப்படியே 12 ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், அந்த செல்ல நாயும் அந்தக் கல்லறை மீது இறந்து கிடந்தது. தனது முதலாளி மீது அது கொண்டிருந்த அன்பைப் பாருங்கள். ஒரு நாய்க்கு இருக்கும் விசுவாசம், மனிதனுக்கு இருக்க வேண்டாமா! அவன் தனக்கு உணவளித்த முதலாளியிடம் எந்தளவுக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்பது இப்போது புரிகிறதா!