* மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பணக்காரனோ, ஏழையோ யாராக இருந்தாலும் போதும் என்ற மனதை இறைவனிடம் வேண்டிப் பெற வேண்டும். *முதுமைக்கு தேவையானதை இளமையிலும், மறுபிறவிக்கு தேவையானதை இப்பிறவியிலும் தேட வேண்டும். *கண்ணுக்குத் தெரிந்த உயிர்களுக்கு தொண்டு செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் தொண்டு செய்ய வேண்டும். *கல்வி, தானம், உடல்நலம் மூன்றிலும் தேர்ச்சி பெற இடைவிடாத முயற்சியும், பயிற்சியும் அவசியம். *நல்லவர்களின் உபதேசத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். சாதுக்களின் நல்ல வார்த்தைகள் காது வழியாக உண்ணும் உணவு போன்றது. *இறைவன் நமக்குச் செய்யும் அத்தனை செயலும் அருள் தான். சில நேரத்தில் சோதனை குறுக்கிடும் போது, துன்பம் போல தோன்றலாம். ஆனால், அதுவும் கூட அறியாமை தான். *பலர் சேர்ந்து முறையிடும் போது அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது போல, பலர் இணைந்து நடத்தும் கூட்டுப் பிரார்த்தனைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும். *மனிதனுக்கு பெருமை சேர்ப்பது பட்டமோ, பதவியோ, பணமோ, அழகோ, குலமோ அல்ல. அறிவு ஒன்றே ஒருவருடைய உயர்வுக்கு வழிவகுக்கும். *இனிய சொற்களைப் பேசும் நல்லவர்களுக்கு உலகில் துன்பம் உண்டாகாது. எம வாதனை இல்லாமல் கடவுளின் திருவடியை அடையும் பாக்கியம் கிடைக்கும். *திருமால் வாமனராக அவதரித்து இரண்டு அடியால் மூவுலகையும் அளந்தது போல, வள்ளுவர் திருக்குறளால் எல்லா உலகங்களையும் அளந்தார். அந்த குறள் காட்டும் நல்வழியில் நடப்பது நம் கடமை. *விளையாட்டிற்கு கூட பொய் சொல்லாதவர்களின் புகழ் மூவுலகிலும் பரவும். வானுலக அரசனான இந்திரனால் கூட அவர்களை வெற்றி கொள்ள முடியாது. *பொறுமை கடலை விட பெரியது. கடல் சூழ்ந்த இந்த உலகம் அழிந்தாலும், பொறுமை மிக்கவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். *தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஒளிச்சுடர் மேல் நோக்கி நிற்கும். செல்வம் இழந்த நிலையிலும் நல்லவர்கள் உள்ளத்தால் உயர்ந்து நிற்பர். *மற்றவரை மேலேற்றும் ஏணி, தான் மேலே செல்வதில்லை. ஆனால் நல்ல கருத்துகளை உலகிற்கு உபதேசிப்பவர்கள் தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்துபவராக இருக்க வேண்டும். வேண்டுகிறார் வாரியார்.