சபரிமலைக்கு புது கொடிமரம் : சன்னிதானத்தில் தேக்குமரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2017 11:05
சபரிமலை: சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான தேக்கு மரம் சரண கோஷம் முழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுமந்து கொண்டு வந்தனர். சபரிமலையில் புதிய கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. கொடி மரத்துக்கு தேவையான தேக்குமரம் வெட்டி கொண்டு வரப்பட்டு, அது பம்பையில் செதுக்கி வடிவமைக்கபட்ட பின்னர் பச்சிலை எண்ணெயில் ஊற வைக்கப்பட்டது. நேற்று காலை இந்த கொடிமரம் பம்பையில் இருந்து சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்பா சேவா சங்க உறுப்பினர்களும், பக்தர்களும் பம்பையில் குவிந்தனர்.
திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளை துணி கொடிமரத்தில் சுற்றிகட்டிய பின்னர் அதை துாக்குவதற்கான கம்புகள் குறுக்காக கட்டப்பட்டது. காலை 10 மணிக்கு பம்பை கணபதி கோயில் மேல்சாந்தி தீபாராதனை நடத்திய பின்னர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் பயணத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் குறுக்கு கம்புகளை தோளில் சுமந்து புறப்பட்டனர். பம்பை முதல் சன்னிதானம் வரை 18 பகுதியாக பக்தர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இவர்கள் நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சுமக்கப்பட்ட கொடிமரம் இரண்டு மணிக்கு சன்னிதானம் கொண்டு வந்தனர். பின்னர் வடக்கு வாசல் வழியாக சோபான திருமுற்றத்தில் கொண்டு வரப்பட்ட கொடிமரம் கோயிலை வலம் வந்த பின்னர் கொடிமரம் அமைக்கும் இடத்தில் வைக்கப்பட்டது. மே 26-ம் தேதி இது ைஹட்ராலிக் இயந்திரத்தின் உதவியுடன் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் தங்க தகடுகள் பொருத்தும் பணிகள் தொடங்கும். ஜூன் 25-ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.