பதிவு செய்த நாள்
23
மே
2017
11:05
திருத்தணி: நான்கு திரவுபதியம்மன் கோவில்களில் நடந்த தீமிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு, தும்பிகுளம், நெடும்பரம் மற்றும் கூளூர் ஆகிய கிராமங்களில் உள்ள திரவுபதியம்மன் கோவில்களில், கடந்த, 4ம் தே தி கொடியேற்றத்துடன், தீமிதி திருவிழா துவங்கியது. விழாவை ஒட்டி, தினமும் மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தீமிதி திருவிழா நடந்தது. இதில், நான்கு கிராமங்களிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிவிரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.